search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை...
    X

    கல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை...

    ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.
    ஆவாரையை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கலாம். இதன் தாவரவியல் பெயர் காஸியா அரிகுலடா ஆகும். இதை ஆங்கிலத்தில் தி டினர்ஸ் காஸியா என்றும், தெலுங்கில் தாங்கெடு என்றும், மலையாளத்தில் ஆவரா என்றும், கன்னடத்தில் தாங்கடி - கைடா என்றும், ஆவரா - கைடா என்றும், சமஸ்கிருதத்தில் டெலபொட்டகம் என்றும், இந்தி மற்றும் துலுக்கில் தர்வார் என்றும் அழைக்கப்படுகிறது.

    ஆவாரை என்பது குத்துசெடி இனத்தைச் சார்ந்தது. செடியினத்தைச் சார்ந்தது என்றால் அது சுமார் பத்து அடி உயரம் வரையும் மரம் போலவே இருக்கும். ஆனால் குத்துச் செடியினம் என்றால் குறைந்தபட்சம் ஒரு அடி உயரமும் அதிகபட்சம் 5 அடி உயரம் தான் இருக்கும். அதிலும் குத்து என்பது பல கிளைகள் இருக்காது. சுமார் பத்து முதல் முப்பது கிளைகள் வேரிலிருந்து கிளம்பிய ஒரு கிளை ஒரு மண்டையாக இருக்கும். அம்மண்டையில் கிளைகள் இருக்காது. இதே போல கிளையில்லாமல் பத்து முதல் முப்பது வரை குத்து குத்தாக செடிகள் இருப்பதையே குத்துச் செடியினம் என்கிறோம். இந்த குத்து செடியினத்தைச் சார்ந்தது இந்த ஆவாரையாகும்.

    ஆவாரை தென்னிந்தியா முழுவதிலும் ஏராளமாக மஞ்சள் வர்ண பூவுடன் தங்கத்தட்டு போல் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் ஆகியவை மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால் பூ மட்டும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் சுவை துவர்ப்பு ஆகும்.

    ஆவாரம் பூவானது பல்வேறுபட்ட நோய்களை குணப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நோய் உடலில் நோய்தடுப்பு மருந்தாகவும், கல்ப மருந்தாகவும் பயன்படும் மிக, மிக முக்கியமான பூவாகும். சித்தர்கள் “ஆவாரை பூத்திருக்க சாவாரை காண்பதுண்டோ” என்றார்கள். இதன் விளக்கம் சாராயம், பிராந்தி போன்ற போதை பழக்கத்தினால் உடலில் சோர்வு ஏற்பட்டு அதன் காரணமாக கல்லீரல் வீங்கியோ அல்லது கல்லீரல் பாதிப்போ ஏற்பட்டு ரத்தத்திலிருந்து பிரிக்கப்பட முடியவில்லை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து இடித்து சன்னமாக சலித்து கால் டீஸ்பூன் பவுடரை சுடுபாலில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையை சேர்க்காமலும், சர்க்கரைநோய் இல்லாதவர்கள் பாலில் சர்க்கரை சேர்த்து ஆவாரம்பூ பவுடரை நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 21 நாள் அல்லது 48 நாள் சாப்பிட்டால் ரத்தத்திலிருந்து சாராயம், பிராந்தி போன்றவற்றால் ஏற்பட்ட நோய் நீங்கி உடல் பாதிப்பு நன்றாக மாறும்.

    சர்க்கரை நோய் என்பது நான்கு வகைப்படும் அதில் ஒன்று நீரில் சர்க்கரை நோய், இரண்டு ரத்தத்தில் சர்க்கரை நோய், மூன்று பரம்பரை சர்க்கரை நோய், நான்கு கர்ப்ப கால சர்க்கரை நோயாகும். இதில் நீரில் காணும் சர்க்கரைக்கும், ரத்தத்தில் காணும் சர்க்கரைக்கும் நோயின் காலம், நோயின் தன்மை ஆகியவை வேறுபாடாக இருக்கும். நீரில் சர்க்கரை என்பது நாம் உணவை உண்டு நான்கு மணி நேரம் கழித்து உணவானது சிறுகுடலிலிருந்து கணையப் பைக்கு வந்தடையும்.

    இந்த கணையப் பையானது மற்ற உறுப்புக்களைப்போல செயல்படுவதில்லை, மற்ற உறுப்புக்கள் ஒரு பகுதி வாங்குமானால் இன்னொரு பகுதியில் விடும். உதாரணம் இரைப்பைக்கு வந்தடையும் உணவை மேல்புறம் வாங்கவும், கீழ்புறம் விடவும் செய்யும். இதே போல் கண், காது, மூக்கு, வாய், மூளை, இருதயம் உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களும் மேல் பகுதியிலோ அல்லது மேல்பரப்பிலோ வாங்குமானால் உள்பரப்பிலோ அல்லது உள்பகுதியிலோ கொடுக்கும் அல்லது வெளியேற்றும். ஆனால் கணைய திட்டானது மேல் பரப்பிலும் வாங்கும் உள்பரப்பிலும் வாங்கும். இத்தன்மை கணையத்திட்டுக்கு மட்டுமே உண்டு. அப்படி மேல்திட்டில் சமாணன் என்கிற வாயுவால் உணவிலுள்ள உயிர்ச்சத்தான வாயுவை வாங்கிக்கொள்கிறது.



    கல்லீரலிலுள்ள ரஞ்சகம் எனும் பித்தம் கணைய திட்டினுள் சுரந்த பிறகே உணவானது கணையத்தின் உள்திட்டிலுள்ள அன்னத்தை பிரித்தெடுக்கும். இப்படி பிரித்தெடுக்கவில்லை என்றால் இது ரத்தத்தில் சர்க்கரையாகும்.இந்த இரண்டு சர்க்கரை நோய்க்கும் நீரில் சர்க்கரை என்றால் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து சுடுபாலில் காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து நோய் குறையும் வரை சாப்பிட்டு வந்தால் நீரிலுள்ள சர்க்கரையான சமாணன் என்கிற வாயுவை பிரித்து எடுக்க இந்த ஆவாரம்பூ மருந்து பயன்படுகிறது.

    ஆவாரம் பட்டையை காயவைத்து இடித்து, சன்னமாக சலித்து சூரணமாக்கி வைத்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பவுடரை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு அத்தண்ணீரை ஒரு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி இளம் சூட்டில் வாய் கொப்பளிக்க பல் இறுகி கெட்டியாகும். ஆடுகின்ற பற்கள் ஆடாது, சொத்தை விழுந்த பற்களில் வலி உண்டானால் அந்த வலி உடனே நிற்கும். பல் ஈறுகளில் வீக்கம் இருந்தாலோ அல்லது பற்களின் ஈறுகளில் சீழ்பிடித்திருந்தாலும் இந்த நீரால் வாய் கொப்பளித்தால் இந்நோய்கள் நீங்கும்.

    ஆவாரம் வேர் பட்டை ஐம்பது கிராம் பச்சையாகக் கொண்டுவந்து ஒன்றிரண்டாக இடித்து எட்டு டம்ளர் தண்ணீர் வைத்து இரண்டு டம்ளராக சுண்ட கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கியாழத்தை இருநூறு மில்லியும், வெள்ளாட்டு பால் இருநூறு மில்லியும், நல்லெண்ணெய் இருநூறு மில்லியும் ஆக மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கூட்டி அடுப்பில் ஏற்றி சிறுதீயாக எரித்து வந்தால் கியாழமும், பாலும் சுண்டிய பிறகு எண்ணெய் மட்டும் இருக்கும். அந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு, தோல் நோய் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை இந்த எண்ணெயில் கால் டீஸ்பூன் தலைக்கு தேய்த்துக்கொண்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

    ஆவாரம் இலையை பச்சையாக கொண்டுவந்து அரைத்து தசை பிசகல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல், எலும்பு உடைதல் ஆகியவைகள் பொருத்த மற்ற முறையில் பொருந்தியிருந்தால் அதை இந்த இலையில் அரைத்த விழுதை தயிர் அல்லது முட்டையின் வெண்கருவில் கலந்து அப்படி பொருத்த மற்ற முறையில் இருந்ததை சரி செய்து அதன்மீது பத்தாக இதை போட்டு துணி சுற்றி கட்டினால் எலும்பு முறிவு கூடிவிடும். மூட்டு நழுவியது மீண்டும் பழைய நிலைக்கு வரும், தசை பிசகல் குணமாகும்.

    ஆவாரை இலை, பூ, பட்டை, வேர், வேர்பட்டை, பிசின், விதை ஆகிய அனைத்து உறுப்புகளும் தனித்தனி மருத்துவ குணம் கொண்டதாகும். ஆவாரை என்றால் கல்லீரலுக்கு மருந்து என்று பொருள் ஆகும்.

    டாக்டர் கேபி.அர்ச்சுனன், இயக்குனர், இம்ப்காப்ஸ்
    Next Story
    ×