search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இருமலை குறைக்கும் அன்னாசி, அதிமதுரம்
    X

    இருமலை குறைக்கும் அன்னாசி, அதிமதுரம்

    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    Next Story
    ×