search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூட்டு வலியை போக்கும் வர்ம புள்ளிகள்
    X

    மூட்டு வலியை போக்கும் வர்ம புள்ளிகள்

    மூட்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதையும் மூட்டு வலி பற்றியும் பார்ப்போம்.
    மனித உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பகுதியில் குத்தல், குடைச்சல், வலி இல்லாதவரை அவனுடைய அன்றாட பணிகளில் எந்த பாதிப்பும் இல்லை, எங்காவது குத்தல் குடைச்சல், வலி ஏற்பட்டு விட்டால், அவன் பாதிப்புக்கு உள்ளாகிறான். அதிலும் மூட்டு வலி ஏற்பட்டு விட்டால் அவனுடைய அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. அவன் மனமும் பாதிக்கப்படுகிறது.

    மனிதனின் கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அவனால் எழுந்து நிற்கவும், நடக்கவும், உட்காரவும், முடியாமலும், காலை கடன்களை கூட சரியாக கழிக்க முடியாமலும், அவதிப்படுகிறான். ஒரு சிலருக்கு மூட்டுகளில் வீக்கம் இருக்கும். ஒரு சிலருக்கு மூட்டுகளில் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு மூட்டுகளில் ஒன்றுக்கு ஒன்று உராயும்போது சத்தம் இருக்கும்.

    இவை அனைத்துமே மூட்டுகளில் ஏற்படும் வலிதான். இந்த உடல் என்பது எண் சாண் கொண்ட உடல் ஆகும். பாதத்தில் இருந்து இரண்டு சாண் மேல் பகுதியும், உச்சந்தலையில் இருந்து ஆறு சாண் கீழ்ப்பகுதியும் சேரும் இடம்தான் கால் மூட்டு என்பது அதாவது முழங்கால் எலும்பின் மேல் பகுதியும், தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும் இரு எலும்புகள் இவ்விரண்டும் சேரும் இடம் தான் மூட்டு பகுதியாகும்.

    இந்த இரு எலும்புகளின் மத்தியில் மஜ்ஜை என்னும் ஈரப்பதம் இருந்து கொண்டு நம் கால்களை நீட்டவும், மடக்கவும் எழுந்து நிற்கவும் நடக்கவும், விளையாடுவதற்கும், குதித்து ஓடுவதற்கும் உதவுகிறது. நமக்கு எந்த சிரமும் இல்லாமல் இருப்பதற்கு இந்த இரு எலும்புகளில் மத்தியில் இருக்கும் மஜ்ஜை ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

    நம் மூட்டைச் சுற்றி அசையும் தசைகளும், நாண்களும், நரம்புகளும், முட்டியின் மேல் பகுதியில் தோலும் அமைந்து உள்ளது.
    முட்டியின் வீக்கம் என்பது வாதமாகும். இது முடக்கு வாதமாகவும் இருக்கலாம். வாதம் 80 வகைப்படும். மூட்டைச் சுற்றி நீர் கோர்த்துக் கொண்டு இருந்தால் இது சிறுநீரகத்தின் குறைபாடாகவும் இருக்கலாம்.

    யாருக்கு என்ன பிரச்சினை என்று அவர்களது நாடி பார்த்து தான் கூற முடியும். மூட்டுகளில் ஒன்றுக்கு ஒன்று உராயும் சத்தம் வருவது என்பது மூட்டுகளில் உள்ள மஜ்ஜையின் ஈரப்பதம் குறைவதால் ஏற்படுகிறது. அப்போது வலியும் வரும். ஆனால் இது எலும்பு தேய்மானம் அல்ல. எலும்புகளில் ஒடிவு, முறிவு ஏற்படலாம். ஆனால் எலும்பு தேய்மானம் ஆகாது. 18 சித்தர்களின் மருத்துவ நூல்களில் எலும்புகளில் ஒடிவு, முறிவு, ஏற்படும் போது அதற்கான மருத்துவம், மருத்துவ செய்முறை பற்றி கூறப்பட்டுள்ளது.
    மனிதன் பறவைகள், விலங்குகள் உடல்களில் எந்த எலும்பும் தேயாது, மனித உடலில் உள்ள எலும்புகளின் இணைப்புகளின் பகுதியில் மஜ்ஜையான ஈரப்பதம் இருக்கும். இவைதான் நம் கை, கால் நீட்ட மடக்க உதவியாக உள்ளது.

    எலும்புகளின் இணைப்புகளில் உடல் முழுவதும் இதுபோன்ற மஜ்ஜை ஈரப்பதம் இருந்து நம் செயல்பாடுகளை சிறப்பாக செய்ய உதவுகின்றன. நாம் உண்ணுகின்ற உணவில் இருந்து எடுக்கப்படுகின்ற சாறு ஐந்தாவது நாளில்தான் மஜ்ஜையாக எலும்புகளின் இடுக்கில் கொண்டு போய் சேரும்.

    எனவே நாம் உண்ணுகின்ற உணவை சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும். உணவு முறை பற்றியும் இன்று உண்ணக்கூடிய உணவு உடலில் இரண்டாக பிரிக்கப்பட்டு, எந்த நாளுக்கு எந்த பகுதிக்கும் எடுத்து செல்லும் என்பதை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
    மூட்டுவலி என்பது ஒரு சிலருக்கு உள் உறுப்புகளின் பாதிப்புகளை வெளியே காட்டும் அறிகுறியாகவும் சிலருக்கு அமையும். சிலருக்கு மூட்டு பகுதி மட்டுமே பாதித்திருக்கும். அவர்கள் வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்துவார்கள்.

    இளம்பெண்கள் வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தினால் 35 வயதுக்கு மேல் மாதவிடாய் தடைப்படும். எனவே பெண்கள் தங்களது ஆரோக்கியம் கருதி இந்தியன் டாய்லெட் பயன்படுத்த வேண்டும். இதனால் மாதவிடாய் 47 வயது வரை தடை இல்லாமல் வரும்.
    சிலருக்கு மூட்டின் பின் பகுதியில் செல்ல கூடிய ஒரு சில நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டாலும் மூட்டு வலி வரும்.
    மனிதனின் கால்களின் பின் பகுதியில் செல்லக்கூடிய நரம்புகள் பெண்கள் சடை பின்னியது போல் அமைந்திருக்கும்.

    கால் முன் பகுதியில் செல்ல கூடிய நரம்புகள் சில உள் உறுப்புகளும் கால் பின் பகுதியில் செல்ல கூடிய நரம்புகள் சில உள் உறுப்புகளுக்கும் தொடர்புடையது. மலச்சிக்கல் உள்ளவருக்கும் மூட்டு வலி வரும். மூட்டு வலியை சித்த வர்ம புள்ளிகளின் மூன்று முக்கிய வர்ம புள்ளிகளை தூண்டுவதால் மூட்டு வலியை குணப்படுத்தலாம்.

    1. குதிரை முக வர்மம். இந்த வர்ம புள்ளியை தூண்டுவதால் முழங்கால்களுக்கு பலம் கொடுக்கும். முழங்கால் எலும்பு சார்ந்த வலியையும் குணமாக்கும்.

    2. கொம்பு கால வர்மம். இந்த வர்ம புள்ளியை தூண்டுவதால் - கால்களுக்கு ஆற்றலைத் தரும். இடுப்பு வலியை குணமாக்கும். கால்களுக்கு பலத்தை தரும்

    3. மூட்டு வர்மம் புள்ளியை தூண்டுவதால் மூட்டு தொடர்பான அனைத்து வலிகளும் சரியாகும். மூட்டு (இரு எலும்புகளின் மத்தியில்) மஜ்ஜை குறைந்தால் அந்த இடத்தில் பச்சிலை மூலிகைகளை வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணம் அடையும். முட்டிக்கு மேல் வர்ம வசவு தைலம் வர்ம களிப்பு ஆகியவை தேய்ப்பதாலும் மூட்டு வலி சரியாகும்.

    உடலில் எந்த எலும்பும் தேயாது :

    மூட்டு வலியானது தற்போது 40 வயதை கடந்து விட்டாலே வந்து விடுகிறது. பொதுவாக மூட்டு வலி என்றால் எலும்பு தேய்மானம் ஆகி விட்டது என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு. நம் உடலில் உள்ள எந்த எலும்பிலும் தேய்மானம் ஏற்படாது, உறுதி வாய்ந்தது. ஆனால் எலும்புகள் உராய்வுக்கு மஜ்ஜையில் உள்ள ஈரப்பதம் அவசியம். இந்த ஈரப்பதம் குறையும் போது மூட்டுகள் உராயும் நேரத்தில் தான் மூட்டு வலி ஏற்படுகிறது.

    நம் முன்னோர்களும், சித்தர்கள் நூலிலும் இதைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள். மூட்டு வலி ஏற்படுவதற்கு போதிய உடற்பயிற்சி இல்லாததும், சரியான நேரத்துக்கு சாப்பிடாததும், தவறான உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம். பெண்களையும், முதியோர்களையும் மூட்டு வலி அதிகம் தாக்குகிறது. அவர்களுக்கு மூட்டு வலி குறித்த விழிப்புணர்வு அவசியம். உரிய நேரத்துக்கு சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே போதும் மூட்டுவலி வராது.

    வர்ம ஆசான்
    மருத்துவர் அ.ஏழுமலை
    (செல் : 97106 90959)

    Next Story
    ×