search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஞாபக சக்தியை தூண்டும் வல்லாரை
    X

    ஞாபக சக்தியை தூண்டும் வல்லாரை

    குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை துணைபுரியும்.
    சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுக்களில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம்.

    வேர்த்தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3 முதல் 6 பூக்கள் வரை காணப்படும். பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும்.

    ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் இந்தத் தாவரம் பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும்.

    வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும். மருந்துச் செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்மி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப் பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

    வல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைக் கொத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். சாதாரணமாகக் கீரை வியாபாரம் செய்யும் நபர்களிடமும் வல்லாரை கிடைக்கும்.

    வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லா ரையை உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும் இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால் தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும்.

    முழுத்தாவரம்: துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. இவை, ஞாபக சக்தியைப் பெருக்கும், நோய் நீக்கி உடலைத் தேற்றும், வியர்வையை அதிகமாக்கும், சிறுநீர் பெருக்கும், மாதவிலக்கைத் தூண்டும், உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம், படை ஆகியவற்றையும் குணமாகும்.

    குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் அளவு, தினமும், காலை, மாலை வேளைகள், டம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்துவர வேண்டும் அல்லது பசுமையான 2 இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம்.

    வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும்.

    வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.

    அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.
    Next Story
    ×