search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறுதானியங்களின் வகைகளும் - பயன்களும்
    X

    சிறுதானியங்களின் வகைகளும் - பயன்களும்

    புழுங்கலரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை.
    புழுங்கலரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் சாப்பிட்டதும் ரத்தத்தில் கலக்கும் ஆற்றல் குறைவு.

    கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது. ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் வேண்டாத கொழுப்புகளை கரைக்கும் சக்தி படைத்தவை. புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து, தாது, உப்பு, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இவற்றில் இருக்கின்றன.

    தினை :

    10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினையும் ஒன்று. தினை உற்பத்தியில் இந்தியா, முதல் இடம் வகிக்கின்றது. குழந்தை பெற்ற தாய்க்கு, தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு. கப நோயைத் தீர்க்கும். புரதம், நார்ச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, கனிமச் சத்து, இரும்புச் சத்து மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்தது. வாயுத் தொல்லையைச் சரி செய்யும்.

    குதிரைவாலி :

    மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான், குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போன்ற அமைப்பு கொண்டது. இதில் – இரும்புச் சத்து, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

    கம்பு :

    அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது. வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.

    சோளம் :

    அமெரிக்கர்கள் அதிக அளவு பயன்படுத்தும் தானியத்தில் சோளமும் ஒன்று. இந்தியாவில் தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று கிராமங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் நாட்டுவகைச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும். சோளத்தில் அதிக அளவு மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளது.

    வரகு :

    பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.

    கேழ்வரகு :

    ஒரு காலத்தில் இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இன்று வசதியானவர்களும், வியாதியஸ்தர்கள் உண்ணும் உயிர் நாடி உணவாக மாறிவிட்டது. மிகவும் வெப்பமான பகுதியிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். குழந்தைகளுக்குக் கூழாகவும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தோசை, இட்லி, இனிப்பு வகைகளாகவும் செய்து கொடுக்கலாம்.

    பனி வரகு(pani varaku) :

    பனி வரகு பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.

    கவுனி அரிசி :

    'அரசர்களின் அரிசி' என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இதய நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கவுனி அரிசிக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இந்த அரிசியில், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்தும் இருக்கின்றன. இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், 'பி’ 'ஏ’, 'இ’ ஆகிய வைட்டமின்களும், உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. 'ஆர்ஜினைன்’ என்ற அமினோ அமிலம், 'நைட்ரிக் ஆக்ஸைடு’ என்கிற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. மெல்லிய இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுவே இதயப் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
    Next Story
    ×