search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெட்டிவேர்
    X
    வெட்டிவேர்

    கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும் வெட்டிவேர்

    வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
    வெட்டிவேர் கோரைப் புல் இனத்தை சார்ந்தது. மணற்பாங்கான இடங்களில் இது அதிகம் காணப்படும். ஆற்றுப்படுகைகளில் பெரும்பாலும் செழித்து வளரும். நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது. வேர் பகுதி கொத்தாக காணப்படும். கொத்தாக இருக்கும் வேரை, வெட்டி எடுத்து பயன்படுத்துவதால் இதற்கு வெட்டி வேர் என பெயர் வந்திருக்கலாம். இதற்கு குருவேர் என்ற பெயரும் உண்டு.

    (பலரும் நன்னாரி வேரையும், வெட்டிவேரையும் ஒன்றாக கருதுகிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை)

    தமிழகத்தில் கிடைக்கும் வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது.

    கோடை காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பூசலாம். கால் எரிச்சல், வலி போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசவேண்டும்.

    வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும். காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

    வெட்டிவேரிலிருந்து ஒருவித நறுமண எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது. வெட்டி வேர் மருந்துகளிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும்.

    கூந்தல் தைலம், சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் தயாரிக்கப்படுகிறது. கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேர் தட்டி, வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுகின்றன.
    Next Story
    ×