search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு
    X
    கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு

    குழந்தைகளை அதிகம் தாக்கும் கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடும்... அறிகுறியும்...

    இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள்.
    Attention Deficient Hyperactive Disorder என்னும் ஏடிஎச்டி என்பது அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு அல்லது கவனக்குறைவு மிகையியக்கம் குறைபாடு எனலாம். இது அவதானக் குறைவு மற்றும் அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பெரும் நிலையைக் கொண்ட சிறுவயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த ஓர் உளவியல் குறைபாடாகும்.

    சிறுவயதினர் மட்டுமன்றி பெரியவர்களுக்கும் ஏற்படும் என்றாலும் அதிகம் குழந்தைகளுக்குதான் வரக்கூடும். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். சில குழந்தைகள் சுற்றித் திரிந்து விளையாடும். சிலக் குழந்தைகளோ அம்மாவிடம் மட்டுமே பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்கும். இன்னும் சில குழந்தைகளோ தன் வயதொத்த குழந்தைகளோடு மட்டுமே விளையாடும்.

    இவர்களைத் தாண்டி சில குழந்தைகள் எப்போதும் கால்களில் சக்கரம் கட்டியது போல் ஓயாமல் ஓடியாடி திரிந்துகொண்டிருக்கும். அவர்களது கவனம் எதிலும் இல்லாமல், விடாமல் பேசிக்கொண்டும், துறுதுறுவென்றும் சுற்றித் திரிவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் எந்தவொரு விளையாட்டிலும் அதிக நேரம் கவனம் செலுத்தாமல், தொடர்ந்து 2 முதல் 5 நிமிடங்கள் கூட அமர்ந்து ஒரு விளையாட்டிலும் ஈடுபடாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் ஏடிஎச்டி உள்ள குழந்தைகள் என்கிறோம்.

    இது ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் வரக்கூடும் என்றாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரக்கூடியது. அதாவது, 10 ஆண் குழந்தைகளுக்கு 1 பெண் குழந்தை வீதம் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

    இதன் அறிகுறிகளை 3 - 4 வயதில் பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும், மற்றவர்களும் எளிதில் அதாவது வெளிப்படையாக கண்டறியலாம் என்றாலும் 1 1/2 வயதில் கூட சில குழந்தைகளிடம் இதன் அறிகுறிகளை சுலபமாக அடையாளம் காணலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி 1 வயது முதல் 7 வயது வரை எந்த வயதிலும் வரக்கூடும். இது கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும்  ஏற்படும் என்றாலும் நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது யாவரும் கவனத்தில் நிறுத்தவேண்டிய ஒன்று.

    அறிகுறிகள்

    1.ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள்.

    2.ஒரு விளையாட்டுப் பொருளில் அல்லது ஒரு விளையாட்டில் அதிகபட்சம் 2 - 3 நிமிடங்கள் கூட கவனம், நேரம் செலுத்த மாட்டார்கள். ஆனால், அதுவே அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால் அதை விளையாடி முடிக்கும் வரை அவர்கள் கவனம் முழுதும் அதில் இருக்கும்.

    3. தூக்கம் சிறிது நேரம் தான் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.

    4. எந்நேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.

    5. ஓரிடத்தில் அதிக நேரம் அமர்ந்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, உணவு உண்ணும் போது, வீட்டு பாடம் படிக்கும் போது.

    6. அவர்கள் அதீத ஆற்றலோடு இயங்குவதால், தினசரி வேலைகளான குளிக்க வைப்பது, சரியான நேரத்தில் பள்ளிக்கு கிளப்புவது என அனைத்தும் சிரமமான ஒன்று.

    7. ஏதேனும் ஒரு வேலை கொடுத்து செய்யச் சொன்னால், அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, ஓர் அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் இருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னால், அதை புரிந்து அவர்கள் செய்வார்கள். எனினும் அதற்குள் எக்கச்சக்கமான கவனச்சிதறல்கள் இருக்கும். ஆகையால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைக்குப் பல நிமிடங்களை வீணடிப்பார்கள்.  

    8. Play school, Montessori போன்றவை விளையாட்டு முறை கல்விதான் எனினும் இவர்கள் கவனமும், உட்கார்ந்து இருக்கும் நேரமும் குறைவுதான்.

    9.Story time, snack time, colouring time போன்ற நேரங்களில் தன் இருக்கையில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து ஓடுவது, பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை அவர்கள் வேலையை செய்ய விடாமல் கவனம் சிதறச் செய்வது.

    10.வரிசையில் நிற்கும்போது ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரிவது.

    11.யாரிடமும் பேசாமல், உடன் சேர்ந்து விளையாடாமல், பாடம் நடத்தும்போது கவனிக்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.  

    Next Story
    ×