search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெற்றோர்களே குழந்தைகளின் உடல் நலனை பேணுங்கள்
    X
    பெற்றோர்களே குழந்தைகளின் உடல் நலனை பேணுங்கள்

    பெற்றோர்களே குழந்தைகளின் உடல் நலனை பேணுங்கள்

    காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கூடம், பணி செய்யும் இடம், மற்றும் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
    பள்ளிக்கூடம், அனைத்து தரப்பு மாணவர்களும் கூடி இருக்கும் இடம். இங்கு வேறுபாடுகளை மறந்து குழந்தைகள் பழகுகிறார்கள். எனவே பள்ளியில் ஆரோக்கியமான சூழலை அமைத்து தர வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் கடமை ஆகும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகளும் தன்சுத்தம் பேண வேண்டும். தற்போது சீதோஷன நிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகைப்பட்ட காய்ச்சல் பரவி வருகிறது. எனவே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் பாதிப்புக்கு பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரியவர்கள், குழந்தைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாக்கடை மற்றும் கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே கழிவுகள் தேங்குவதற்கு அனுமதிக்க கூடாது. அது போல் நல்ல நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் நோய் பரப்பும் தன்மை உடையதாக உள்ளது. எனவே டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த ஓடு போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேங்கி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.

    சுகாதார பணிகளை மேற்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் பணியாற்றினால் எதையும் சாதித்து விட முடியாது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். அப்போது தான் சுகாதார பணிகளை 100 சதவீதம் செய்ய முடியும். அதோடு, வெளிப்புற சுத்தம் போல் தன்னையும் ஒவ்வொருவரும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களிடம் சென்று முறையாக சிகிச்சை பெற வேண்டும். சுயமாக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால் அது ஆபத்தாக அமைந்து விடும்.

    காய்ச்சல், தொண்டைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். அது போல் பயன்படுத்திய கைக்குட்டை மற்றும் துணியை நன்கு துவைத்து வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் எங்கு சென்றாலும் வீட்டிற்கு வந்த உடன் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்கள் உள்ளிட்ட பாகங்களை தொடக்கூடாது.

    காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கூடம், பணி செய்யும் இடம், மற்றும் பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. அப்போது தான் ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொருவருக்கு காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும்.

    ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதே ஆரோக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு விடும். நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம். உடலுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் மனம் சக்தி இழந்து விடும். வாழ்க்கை வலி மிகுந்ததாக மாறி விடும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். எனவே உடலை நல்ல முறையில் பராமரிக்க முறையாக உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சத்து நிறைந்த சரிவிகித உணவுகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலன் வலுவாக இருப்பதோடு மனநலனும் ஆரோக்கியமாக இருக்கும்.
    Next Story
    ×