search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    X

    தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • தூக்க நேர்ச்சை திருவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் தூக்கத்திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவின் போது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவும் பச்சிளம் குழந்தைகளை தூக்கவில்லில் தூக்கி நேர்ச்சைகடன் செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு பிரதான கோவிலில் இருந்து திருவிழா நடைபெறும் கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடந்தது.

    மாலை 3 மணிக்கு அம்மன்கள் மூலக்கோவிலில் இருந்து திருவிழா கோவிலுக்கு செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி கொடியேற்றினார். பின்னர் தூக்கத்திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    விழாவை ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் ஆதினம் வாமதேவ சிவாலய தேசிக சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி ெதாடங்கி வைத்தார். விழாவில் கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை தாங்கினார். நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பொருளாளர் சீனிவாசன் தம்பி நன்றி கூறினார்.

    கொடியேற்ற விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், இணை செயலாளர் பிஜூ குமார், துணைத்தலைவர் சதிகுமாரன் நாயர், பொருளாளர் சீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×