search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இன்று கொடியேற்றம்
    X

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று கொடிபவனி நடந்த போது எடுத்த படம்.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இன்று கொடியேற்றம்

    • 5-ந்தேதி மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.
    • 5-ந்தேதி இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கன மக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி விழா நடந்தது.

    இந்த ஆண்டு கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு பாதிரியார் லெரின் டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து எளியோருக்கும், திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய பொருட்கள் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் கொடி பவனி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2-ம் திருப்பலி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி, கொடியேற்றம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி முதல்வர் ரூபஸ் பர்னான்டோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி 6-ம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் புதுநன்மை திருப்பலி, 11.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் மறைமாவட்ட துறவியருக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

    Next Story
    ×