search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது

    • வசந்த உற்சவம் இன்று தொடங்கி 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
    • வசந்த உற்சவ நாட்களில் தாயார் மூலவர் சேவை கிடையாது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம், நான்கு புறமும் அகழி போல உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் ரெங்கநாச்சியார் எழுந்தருளுவார்.

    இந்த ஆண்டுக்கான தாயார் வசந்த உற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைவார்.

    வசந்த உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேருவார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

    பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×