என் மலர்
வழிபாடு

நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளிய போது எடுத்த படம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்
- நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர்.
- நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்ககொடிமரம் அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் நாள் அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரருடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரரை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






