search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது
    X

    ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தபோது எடுத்த படம்.


    சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது

    • விழா 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • 16-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம், இரவு பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    12-ந்தேதி காலை சிறியசேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 13-ந் தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 14-ந் தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வபூபால வாகன வீதிஉலா, 15-ந் தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அவதாரம் வீதிஉலா), இரவு கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.

    16-ந்தேதி காலை அனுமன் வாகன வீதிஉலா, மாலை வசந்தோற்சவம், மாலை தங்கத் தேரோட்டம், இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை சூரியபிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திரபிரபா வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (மரத்தேர்), இரவு குதிரை வாகன (அஸ்வ) வீதிஉலா, 19-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில் 15-ந்தேதி கருட சேவை அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ஆழ்வார் திருமஞ்சனம்

    இதனை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6.30 மணி முதல் 11 மணி வரை கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்திய பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கட்ட கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற சுகந்த வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பதியை சேர்ந்த பரதாள மணி என்ற பக்தர் கோவிலுக்கு இரண்டு திரைச்சீலைகளை நன்கொடையாக வழங்கினார்.

    Next Story
    ×