search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை பக்ரீத் பண்டிகை: மசூதிகளில் சிறப்பு தொழுகை
    X

    நாளை பக்ரீத் பண்டிகை: மசூதிகளில் சிறப்பு தொழுகை

    • குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக் கொள்வார்கள்.
    • மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.
    • மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாகும்.

    சென்னை :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.

    புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட்டது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.

    இறைக்கட்டளை என்றதும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.

    ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் மாதம் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளிலும், திடல்களிலும் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். காலையிலேயே சிறப்பு தொழுகை நடைபெறும். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

    தொழுகைக்குப் பிறகு குர்பானி கொடுக்கப்படும். ஆடு தனி நபராகவும், மாடு கூட்டு குர்பானி ஆகவும் கொடுக்கப்படும். குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்துக் கொள்வார்கள். மற்ற இரண்டு பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் இருந்து 20 லட்சம் பேர் கூடுவார்கள்.

    கொரோனா காரணமாக சவுதி அரேபியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே கடந்த 2 ஆண்டாக அனுமதி வழங்கப்பட்டது. மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 10 லட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

    Next Story
    ×