search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் 50 அரிய தகவல்கள்
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் 50 அரிய தகவல்கள்

    • மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள்.
    • அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

    அம்மனின் தோற்றத்தை வார்த்தைகளாலேயே சொல்லலாம். "ஐந்து தலைப் பாம்பு குடை விரிக்க, தலையில் தங்கக்கிரீடம் அணிந்து, மாதுளம்பூ நிறத்தவளாய், எட்டுக் கரத்திலும் கத்தி, உடுக்கை, தாமரைப்பூ, திரிசூலம், கபால வடிவம், பாசம், காண்டீபம், மணி" ஏந்தி, இடதுகால் பீடத்தில் மடித்திருக்க, வலது காலில் மூன்று அசுரர்களின் தலையை மிதித்த வண்ணம் கிழக்குத் திசை நோக்கி சமயபுரத்தாள் அமர்ந்திருக்கிறாள்" அம்மனை பற்றி நீங்கள் அறிந்திராத 50 தகவல்களை இங்கே பார்ப்போம்.

    1. 'மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.

    2. அன்னை இடது கால் மடித்து, வலது கால் தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயை குறிக்கிறது.

    3. எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.

    4. நட்சத்திரங்கள் 27 ஆதிக்கங்களை தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள்புரிகிறாள் சமயபுரத்தாள்.

    5. வசுதேவர் தேவகி தம்பதியின் 8-வது குழந்தையான கிருஷ்ணர், நந்தகோபன் யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்படுகின்றனர்.

    6. அந்தப் பெண் குழந்தை சிறைக்கு வந்து கம்சனை கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து "உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!" என்று கூறி மறைந்தது.

    7. அந்த குழந்தை தான் சமயபுரம் மாரியம்மன் என்று தல வரலாறு கூறுகிறது. தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

    8. விஜயநகர மன்னர், படைகளோடு சமயபு ரத்தில் முகாமிட்டார். போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்கு கோவில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார்.

    9. அதன்படி போரில் மன்னர் வெற்றி பெற்றார், அம்மனுக்கு கோயில் கட்டி கொடுத்தார். நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

    10. உரிய காலத்தில் கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், 'சமயபுரத்தாள்' என்பது அம்மனது அடைமொழி, "சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள்" என்ற முதுமொழி.

    11. தற்போதைய ஆலயம் கி.பி. 1804ல் விஜ யரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

    12. பக்தர்களது முயற்சியால் 1984-ம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோவில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

    13. ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள்புரிகிறார்கள். அம்மனின் உக்கிர த்தை தணிக்க காஞ்சி பெரியவரின் ஆலோசனை வேண்டினர்.

    14. காஞ்சி பெரியவரின் ஆலோசனை படி ஆலய வலப்புறத்தில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர்.

    15. இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

    16. கிருபானந்த வாரியார் ஐயா தமக்கு கிடைத்த நன்கொடை மூலம் கோவிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

    17. விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

    18. ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    19. அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

    20. பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது 'பச்சைப் பட்டினி விரதம்' எனப்படுகிறது.

    21. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை நிவேதிக்கப்படுகின்றன.

    22. அதாவது சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன.

    23. சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் தாயின் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் பூமாரி பொழிந்து குளிரச் செய்கிறார்கள்.

    24. சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

    25. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோவில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பவுர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.

    26. இரண்டாம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

    27. சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

    கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.

    28. அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் ஈரத்தன்மையுடன் வைத்திருக்கிறார்கள், அன்னை குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

    29. பார்வை இழந்த சிவந்திலிங்கசுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

    30. பெருமாளிடமும், ஈஸ்வரரிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

    31. கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள்.

    32. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் 'மகமாயி'க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர்.

    33. சித்திரை திருவிழா பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார்.

    34. இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

    35. நமது குறைகளை காகிதத்தில் எழுதி, தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி பிரார்த்தித்தால் உடனே குறைகள் தீருகிறது.

    36. இங்கு 'கரும்புத்தூளி எடுத்தல்' என்ற விசேஷப் பிரார்த்தனை விசேஷம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல்.

    37. அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை வேஷ்டி பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்து 6-வது மாதத்தில் பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.

    38. அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள்.

    39. அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

    40. தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால் அம்மனே இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

    41. அம்மை நோய் பிடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது

    42. அம்மன் சிவரூபமாக கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோவில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

    43. உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல், எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

    44. ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வணங்கிய பின்னரே, சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

    45. தமிழகத்தில் பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக காணிக்கை பெறும் தலம் சமயபுரம்.

    46. தாலி வரம் வேண்டி தாலி தங்கம் மிகஅதிக அளவில் உண்டியல் காணிக்கையாக கிடைக்கிறது.

    47. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் சமயபுரம் அழைக்கப்படுகிறது.

    48. மாரியம்மன் கோவிலின் வடக்கே செல்லாயி அம்மன் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி கோயிலும் இடம் பெற்றுள்ளன.

    49. கோவிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசு சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது.

    50. கடந்த மே 25, 2018 வெள்ளிக்கிழமை கோவில் நிர்வாகத்திற்கு சொந்த மான மசினி என்ற 10 வயதான பெண் யானை கோபத்தின் ஆவேசம் காரணமாக பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றது.

    Next Story
    ×