search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெருமாள் கோவில்களில் லட்சார்ச்சனை வழிபாடு இன்று நடக்கிறது
    X

    பெருமாள் கோவில்களில் லட்சார்ச்சனை வழிபாடு இன்று நடக்கிறது

    • இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.
    • அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் மிகவும் விசேஷமாகும்.

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசித்தி பெற்ற கோவில்களான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மது சூதனப்பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களில் லட்சார்ச்சனை வழிபாடு நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை பூஜை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கொள்ளலாம். ரூ.200 செலுத்தினால் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வதுடன், நெய்வேத்திய பிரசாதமாக எவர் சில்வர் பாத்திரத்தில் லட்டு, பழம், வெற்றிலை, பாக்கு, சிறப்பு பிரசாதம் ஆகியவை வழங்கப்படுகிறது.

    வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல், கோ பூஜை போன்றவை நடக்கிறது. காலை 10.45 மணி முதல் மதியம் 3 மணி வரை அன்னதானமும், மாலையில் புஷ்பாபிஷேகமும், இரவு அலங்கார தீபாராதனையுடன் கருட சேவையும் நடைபெறும்.

    பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உச்ச தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு உச்சகால பூஜை, 1 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு கருடசேவை போன்றவை நடக்கிறது.

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காலை அபிஷேகம், சிறப்புஅன்னதானம், சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு கருட சேவையும், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு அஷ்டாபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சகால பூஜை, இரவு 8 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது.

    இதுபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆசிராமம் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கோவில், தக்கலை பெருமாள் கோவில், தக்கலை பார்த்த சாரதி கோவில், தோவாளை பாலகிருஷ்ண சாமிகோவில், வடசேரி பாலகிருஷ்ணன் கோவில், சுசீந்திரம் இரட்டை தெரு குலசேகர பெருமாள் கோவில், கோட்டார் வாகையடி பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    Next Story
    ×