search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் அனைத்து நிகழ்வுகளிலும் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கலாம்...
    X

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் அனைத்து நிகழ்வுகளிலும் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கலாம்...

    • இந்த ஆண்டு திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஆலயம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சுகாதார பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களுக்கு சிரமமின்றியும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிறுத்தப்பட்டு உள்ளது. திருவிழாநாட்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலும், பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசிர் ஆகியவை நடைபெறும். திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி, அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை சுற்றி உள்ள தெருக்கள், சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பனிமய மாதா திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அந்த பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், குறிஞ்சி நகர் டவர் சாலை உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார். வருங்காலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×