என் மலர்
வழிபாடு

கொடியேற்றும் நடந்தபோது எடுத்த படம்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா தொடங்கியது
- இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
- தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ்மாலை நடக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி புனித தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. இதில் கோட்டார் மறைவட்ட வட்டார முதல்வர் ஆனந்த் தலைமையில், கோட்டார் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெனிட்டோ மறையுரை ஆற்றினார். பிற்பகல் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கி யது.
அதனைத்தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும், புகழ்மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைச்செயலாளர் சகாய செலீன், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப் மனோகரன், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர்கள் பயஸ் ராய், மிக்கேல், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ்மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
8-ம் திருவிழாவன்று நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழாவையொட்டி (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கையும், அதனைத் தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பலி, மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.






