search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் வழங்கும் விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
    • தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    பாண்டியர்கால சிவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. 29-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டியராஜா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    இரவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிக்கு செங்கோலும், தக்கார் கவிதாவிற்கு சுவாமி பாதமும் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலரும், சுவாமி பாதத்தை தக்காரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் குறுக்குத்துறை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சண்முகர் வைர கிரீடம், வைர வேலுடனும், வள்ளி, தெய்வானை தங்க கிரீடங்களுடன் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×