search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பித்தபோது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 29-ந்தேதி சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.
    • வருகிற 5-ந்தேதி கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அதாவது கீரனூரில் கருவூர் சித்தர் சிவாலயங்களுக்கு சென்று நல்வரங்களை கேட்டு பெற்றார். இவ்வாறு நெல்லைக்கு வந்து சேர்ந்த கருவூர் சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தபோது நெல்லையப்பரிடம் இருந்து மறுமொழி கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் சாபமிட்டு விட்டு மானூருக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நெல்லையப்பர் ஆவணி மூல நாளில் மானூருக்கு சென்று சித்தருக்கு காட்சி கொடுத்தார்.

    இந்த வரலாற்றுக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஆவணி மூல திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை சுவாமி சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் 4-வது நாளான 29-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது.

    3-ந்தேதி இரவு 9 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி இரவு 1 மணி அளவில் சந்திரசேகரர் சுவாமி, பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேசுவரர், தாமிரபரணி, அகத்தியர், குங்குலிய கலய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கு, சப்பரங்களில் 4 ரதவீதிகளிலும் உலா வந்து மானூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

    அங்குள்ள அம்பலவாண சுவாமி கோவிலில் 5-ந்தேதி காலை 7 மணிக்கு கருவூர் சித்தருக்கு காட்சி கொடுத்து சாபவிமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    Next Story
    ×