search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு

    • ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும்.
    • ஆண்களும், பெண்களும் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

    இதனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து நாகர்சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இந்த கோவிலின் விசேஷமான நாட்களாகும். இந்த நாட்களில் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று ஆகும். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதாவது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிடுவதற்கு வசதியாக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் பக்தர்களுக்கு வசதியாக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கோவிலின் பிரதான நுழைவு வாயிலுக்கு வெளியே வரை இருந்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி வழிபாடு செய்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநில பகுதிகளில் இருந்து, நெல்லை மாவட்டப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    சிறப்பு அபிஷேக அர்ச்சனைக்கு ரூ.400 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு ஒரு லிட்டர் பால்பாயாசத்துடன் கூடிய சில்வர் பாத்திரம் ஒன்று, தேங்காய், பழம், பிரசாதம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக பால்பாக்கெட், மஞ்சள் பொடி பாக்கெட் விற்பனை செய்யப்பட்டது.

    ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா திடலில் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

    கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில் மொத்தம் 26 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×