search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று மாலை கள்ளர் வெட்டு திருவிழா
    X

    மாவிளக்கு ஊர்வலம் நடந்த காட்சியை படத்தில் காணலாம்.

    கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று மாலை கள்ளர் வெட்டு திருவிழா

    • கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மணல் எடுத்து செல்வார்கள்
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி, தேரியூரில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங் களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கள்ளர் வெட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் தினசரி வில்லிசையும், தொடர்ந்து நடந்து வந்தது.

    நேற்று கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலம் இடும் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம், மாலையில் நாட்டில் நல்ல கனமழை பொழிந்து நாடுசெழிக்க வேண்டி மாவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜையும் நடந்தது. கோவில் செயல் அலுவலர் காந்திமதி இருபூஜைகளையும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருவிழா தொடங்கியதையொட்டி சென்னை, திருச்சி, மதுரை, சிவகாசி உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேன், பஸ், லாரி போன்ற வாகனங்களில் வந்து குடும்பத்துடன் கோவிலில் தங்கி உள்ளனர்.

    நேற்றுஇரவு உற்சவர் திருவீதி உலாவும், கோவில் கரையரங்கத்தில், இன்னிசை கச்சேரியும் நடந்தது. கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் காலை 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல் காலை 10 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல். சுமார் 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் போட்டி போட்டு புனித மணல் எடுத்து செல்வார்கள் இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.

    விழாவில் சிறப்பு நிகழ்ச்சி யாக சமய சொற்பொழிவு, வில்லிசை, திரைப்பட இன்னிசை கச்சேரி ஆகியன நடைபெறும். 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் புனித மணல் எடுத்துச் செல்வார்கள். அரசு போக்குவரத்து கழகம் சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 500-க்கு மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உதவி ஆணையர் சங்கர் கோயில் தக்கார் அஜித் செயல் அலுவலர் காந்தி மதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×