என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
உத்தம நபியின் அழகிய பண்புகள்
- எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள்.
- தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள், தாராளமாக கலந்து பழகுவார்கள்.
ஏக இறைவன் அல்லாஹ், தனது மார்க்கத்தை உலக மக்களுக்கு தெரிவித்து, அவர்களை நல்வழிப்படுத்த தூதர்களை அனுப்பினான். அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் இறுதித்தூதராகவும், சிறப்புகள் மிகுந்த தூதராகவும் திகழ்பவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.
இறுதித்தூதர் முகமது நபி (ஸல்) அவர்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமை இருளில் மூழ்கி இருந்தார்கள். அந்த மக்களை நேர்வழிப்படுத்த இறைவன் தன் தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்து தந்தான்.
அதன்படி நபிகளாரும் வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள். இதையே திருக்குர்ஆன் (33-21) இவ்வாறு கூறுகின்றது: "அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது".
அத்தகைய சிறப்பு மிக்க உத்தம நபிகள் நாயகம் அவர்களின் அழகிய முன்மாதிரி பண்புகளில் சிலவற்றை காண்போம்.
எத்தனை சொத்துக்கள், செல்வங்கள் பல இருந்தாலும், "இன்னும் வேண்டும்" என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இந்த உலகத்தில், தன்னிடம் இருப்பதை எல்லாம் நற்காரியங்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை இந்த நபி மொழிகள் மூலம் அறியலாம்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக்காற்றை விட அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்". (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி).
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்". (அறிவிப்பவர்: முகம்மத் பின் முன் கதிர் (ரலி), நூல்: புகாரி)
உஹத் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்தநேரத்தில் அவருடன் இருந்த தோழர்கள், "நபியவர்களே! இந்த எதிரிகள் நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாதா?" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை. நானோ ஓர் அழைப்பாளனாக, அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன். இறைவா! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு. நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவர்" என பதில் அளித்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.
பெருமானாரை கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை. மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளும் வரை நாயகம் அவர்கள் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.
சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள். கஞ்சத்தனம் எதுவும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள்.
மேலும் நபிகள் நாயகம் அவர்கள் நேர்மையானவர்கள், தைரியமானவர்கள். யாராவது உதவி எதுவும் கேட்டால் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில், கேட்டவர் மனநிறைவோடு திரும்பிடுமாறு செய்வார்கள்.
எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள், தாராளமாக கலந்து பழகுவார்கள். குழந்தைகளுடன் கனிவுடன் பேசுவார்கள், அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத்தான் இருக்கும்.
அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். விருந்தினர்களுக்கு பெருமானார் (ஸல்) அவர்களே எழுந்து உணவு பரிமாறுவார்கள்.
யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமோ இருக்காது.
இத்தகைய சிறப்பு மிக்க உத்தம நபியின் அழகிய பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.
ஹிஜாஸ் யாஸ்மின், தென்காசி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்