search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஹாசனாம்பாவை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை படத்தில் காணலாம்.

    ஹாசனாம்பாவை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • வருகிற 27-ந்தேதி வரை 15 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.
    • நடைதிறக்கும் நாட்களை நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்

    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் நடை ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். கோவில் திறக்கும்போது கடந்தாண்டு நடை சாத்தப்பட்டபோது ஏற்றி வைக்கப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகமலும், பூக்கள் வாடாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி வரை 15 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.

    முதல் நாள் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு, 2-வது நாளில் இருந்து கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் 7-வது நாளான நேற்றும் ஹாசனாம்பா தேவியை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிலர் சிறப்பு கட்டணத்தில் தரிசனம் செய்தனர். மேலும் சில அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் சாமி தரிசனம் செய்தனர்.

    மாற்றுத்திறனாளி பெண்ணை, அவரது கணவர் தூக்கி சென்று ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்ய வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கவுரம்மா, மாற்றுத்திறனாளி ஆவார். கவுரம்மாவால், சாதாரண மனிதரை போல் நடக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுரம்மா, ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக நாகராஜ், மனைவி கவுரம்மாவை ஹாசனாம்பா தேவி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நாகராஜூக்கு, கவுரம்மாவை வைத்து கொண்டு தரிசனம் செய்ய சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மனைவியை தூக்கி சென்று சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகராஜ், மனைவி கவுரம்மாவை கருவறை முன்பு வரை தூக்கி சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளார். இதற்கு போலீசாரும் சக பக்தர்களை விலககோரி வழிவகுத்து கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு கட்டண தரிசனம் மூலம் முதல் 3 நாட்களில் ரூ.42.78 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அந்த 3 நாட்களில் ரூ.30½ லட்சம் மதிப்புள்ள லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடைதிறக்கும் நாட்களை நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×