என் மலர்
வழிபாடு

அவினாசிலிங்கேசுவரர் கோவில்.
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி தொடங்குகிறது
- 30-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
- 6-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது.
அவினாசியில் உள்ள கருணாம்பிகை அம்மன் உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்றும், தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தேர் உடையது என்ற பல சிறப்புகள் பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 26-ந்தேதி சூரியசந்திர மண்டல காட்சிகள், 27-ந்தேதி அதிகார நந்தி அன்ன வாகன காட்சிகள், 28-ந்தேதி கைலாச வாகன காட்சி, 29-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 30-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
மே மாதம் 1-ந் தேதி அதிகாலை அதிர்வேட்டுகள் முழங்க பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளலும், 2-ந்தேதி காலை 10 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. மீண்டும் 3-ந் தேதி தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.
4-ந் தேதி காலை அம்மன் தேர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர் இழுக்கப்படுகிறது. 5-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந்தேதி நடராசப்பெருமான் தரிசனம் நடக்கிறது. 8-ந் தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி செய்து வருகிறார்.






