என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- 2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், டி.வி.எஸ். ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார், பி.ஜி. மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் வி.சி.ஜெயந்திநாதன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காலை10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, நடக்கிறது. இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ந்தேதி 5-ம் திரு விழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலை கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா நடைபெறும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்கிறார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகி்ற 13-ந்தேதி (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.
2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30-க்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
7-ம் திருவிழா 10-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்