search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடியாத்தத்தில் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கெங்கையம்மன் சிரசு.
    X
    குடியாத்தத்தில் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கெங்கையம்மன் சிரசு.

    குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கெங்கையம்மன் சிரசு

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திரு விழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.

    2 ஆண்டுகளாக கெங்கையம்மன் திருவிழா நடைபெறாததால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் தேர்த்திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தேர் திருவிழா நடைபெற்றது.

    2 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கோவிலை சென்றடைந்தது.

    வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிப்பட்டனர். வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் திரண்டுநின்று அம்மன் சிரசை வழிப்பட்டனர்.

    வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அதிகாலை முதலே வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தொடர்ந்து ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும் சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    காலை முதலே அறுசுவை உணவு கொண்ட அன்னதானமும், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×