
இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், மாலை 4 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து யானை மீது சந்தனக்குட ஊர்வலம் பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை அடைகிறது. 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசையும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், பகல் 12 மணிக்கு யானை மீது களப பவனியும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருவதும், நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெறுகிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் குமரி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை தென் மண்டல ஐ.ஜி.அன்பு மண்டைக்காட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அவர் கடற்கரை, கோவில் வளாக பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதன்பிறகு போலீசாருக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? எனவும் போலீஸ் மெஸ்சிற்கு சென்றும் ஆய்வு நடத்தினார். அப்போது எஸ்.பி.பத்ரி நாராயணன், குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் ஆகியோர் உடனிருந்தனர்.