search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வித்தியாசமான பூஜை அறை டிசைன்கள்
    X
    வித்தியாசமான பூஜை அறை டிசைன்கள்

    வித்தியாசமான பூஜை அறை டிசைன்கள்

    ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போலும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் பல விதமான டிசைன்களில் பூஜை அறையை அமைத்துக் கொள்ள முடியும்..
    ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பறை, சமையலறை, படுக்கை அறையை போன்று இன்றியமையாத மற்றொரு அறை பூஜை அறை என்று சொல்லலாம்.பூஜை அறை வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதாக மக்களிடம் நம்பிக்கை நிலவுகின்றது.எனவே, ஒவ்வொரு வீட்டிலும் அவர்களுடைய இடத்திற்குத் தகுந்தாற்போலும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும் பல விதமான டிசைன்களில் பூஜை அறையை அமைத்துக் கொள்ள முடியும்..

    * இப்பொழுது அமைக்கப்படும் பூஜை அறைகள் பெரும்பாலும் வரவேற்பறையின் மூலையில் கதவுகள் இல்லாமல் திறந்தவெளியில் இருப்பது வித்தியாசமான தோற்றத்தை தருவதாக இருக்கின்றது. இரண்டு அல்லது மூன்று படிக்கட்டுகள் வைத்து அதில் ஒரு சிறிய மேடை இருப்பது போன்றும் அந்த மேடை மீது கடவுள் சிற்பங்களை வைத்துக்கொள்வது போன்றும் அமைக்கப்படுகின்றது. இதன் பின்புறத்தில் படிக்கட்டுகளின் நிறத்திலேயே சுவற்றில் பார்டர் டைல்கள் ஒட்டப்பட்டு நடுவில் வெளிர் வண்ணங்களில் டைல்களை ஒட்டுகிறார்கள். இவை பார்ப்பதற்கு அங்கு வைக்கப்படும்சிற்பங்களை பளிச்சென்று எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. அந்த படிக்கட்டுகளின் மீது விளக்குகள் வைத்து வழிபடுவது போல் வடிவமைத்து படிக்கட்டுகள் முடிந்தவுடன் தரையில் அழகிய கார் பெட்களை விரிப்பதும் தற்கால பூஜை அறை டிசைன்களின் ஒரு அங்கம் என்று சொல்லலாம்.

    * சிறிய வீடாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய அலமாரியை கூட பூஜை அறையாக மாற்றிக் கொள்ளலாம். அலமாரியானது இரண்டு மூன்று அடுக்குகளாக கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் மரத்தில் வளைவுகள் இருப்பது போன்றும் பக்கவாட்டு பகுதிகள் மெல்லியதாக இருப்பது போன்று அமைக்கப்பட்டு வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டு அமைக்கப்படும் பூஜை அறைகள் மிகவும் அழகான தோற்றத்தைத் தருகின்றன. கண்ணாடி அலமாரிகளுக்கு அடியில் மரத்தினால் செய்யப்பட்ட சிறிய ட்ராயர்களை அமைத்து பூஜைக்கு தேவையான சாமான்களை வைத்துக் கொள்வது போல் வடிவமைக்கலாம். இந்த பூஜை அலமாரிகளுக்கு கதவுகள் வைப்பதும் வைக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம் ஆகும்.

    * சிலர் பூஜை அறையை மிகவும் கலைநயம் மிக்க ஒன்றாக அமைக்க விருப்பப்படுவார்கள்.இந்த வகையில் மண்டபம் போன்று மரத்தினால் அறைகளை அமைத்து கோபுரங்கள் அமைத்து அதன் கதவுகளில் மணிகள் தொங்குவது போன்று அல்லது மணிகள் போன்ற அமைப்பில் துவாரங்கள் இருப்பது போன்று வடிவமைக்கிறார்கள். இன்னும் சிலர் பூஜையறை கதவுகளில் கடவுள் உருவங்களை கார்விங் செய்து அமைத்துக்கொள்ளவும் விரும்புகிறார்கள்.இந்த மண்டபத்தினுள் கடவுள் விக்கிரகங்களை வைப்பதற்கும், கடவுள் படங்களை மாட்டுவதற்கும் வசதியான இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.இதுபோன்ற மண்டபங்களை வேறு வீடுகளுக்கு நாம் செல்லும்பொழுது நம்முடன் எடுத்துச் செல்வது போல் கழற்றி மாட்டும் விதமாக வடிவமைத்து வருவதையே மக்கள் விரும்புகிறார்கள்.

    * டைனிங் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ வைப்பதற்கு சிறந்ததாக கருதப்படுவது புனித மேடை உடனான பூஜை அறை ஆகும். இந்த வகை பூஜை அறைகளில் கதவுகள் இல்லாமல் கிரானைட் கற்களினால் செய்யப்பட்ட மேடைகள் அமைத்து பின்புறம் சுவரானது மரத்தினால் இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது.இந்த மரச் சுவற்றில் பெரிய அளவிலான சுவாமி படங்களை மாட்டுவது போன்றும் மேடையின் மீது சுவாமி விக்ரகங்களை வைத்துக்கொள்வது போன்றும் செய்யப்படுவது பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தை தருவதோடு, கோவிலில் கடவுளை தொழுவது போன்ற உணர்வைத் தருகின்றது.

    * வெள்ளை மார்பிள் மற்றும் மரத்தாலான சுவரை கொண்டிருக்கும் பூஜை அறை டிசைனானது மிகவும் நேர்த்தியான ஒன்று என்று சொல்லலாம்.வாஸ்து சாஸ்திரத்தின்படி கடவுளை வைக்கும் திசையானது வடக்கு- கிழக்கு அல்லது கிழக்கு மற்றும் தெற்காக இருக்க வேண்டியது அவசியமாகும்..

    * முழுக்க முழுக்க மரத்தினால் செய்யப்பட்ட பூஜை அறை டிசைனை அமைப்பதற்கு பூஜை அறையில் பெரிய ஜன்னல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மரத்தாலான பூஜை அறையானது நல்ல வெளிச்சமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

    * சில வீடுகளில் அழகான படிகளுடன், பின்னல் வகை மரத் திரையைக் கொண்ட பூஜை அறைகளை அமைக்கிறார்கள். இந்த மரபின்னல் திரையானது வெளிர் மஞ்சள் அல்லது வெண்மை நிறத்தில் இருப்பது போல் வடிவமைக்கப்படும் பொழுது அந்த இடத்தில் விளக்கு வெளிச்சம் மற்றும் லைட் வெளிச்சமானது பூஜை அறைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. இந்த மரதிரைகளிலேயே ஆங்காங்கே கடவுள் படங்களை மாட்டிக்கொள்ளலாம்.அதேபோல் பித்தளை மணிகளை மாட்டும் பொழுது கோவிலுக்குள் நாம் இருக்கும் உணர்வைத் தருகின்றது.

    பூஜை அறையின் வண்ணங்கள் எப்போதும் அமைதியை அதிகப்படுத்தும் இயல்பு உடையவையாக இருக்க வேண்டும். அதற்கு மென்மையான வண்ணங்களை பூஜை அறைகளுக்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.. வெளிர் மஞ்சள்., வெளிர் ஆரஞ்சு மற்றும் வெண்மை போன்ற வண்ணங்கள் பூஜை அறையை அமைதியாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவை.

    * பூஜை அறையின் கதவை தனித்துவமாக வடிவமைப்பது சிறந்தது. பாரம்பரியமான பூஜை அறை தோற்றத்தை விரும்புபவர்கள் மரவேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். நவீன தோற்றத்தை விரும்புபவர்கள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி கதவுகளை தேர்ந்தெடுக்கலாம். பூஜை அறை எப்போதுமே திறந்து இருப்பது போன்ற தோற்றத்தை இந்த கண்ணாடி கதவுகள் கொடுக்கும்.

    * பூஜை அறையை மேலும் அழகு படுத்துவதற்கு சர விளக்குகளை தேர்ந்தெடுக்கலாம்.மேலிருந்து தொங்கும் சரவிளக்குகள் பூஜை அறையின் வெளிச்சத்தை அழகாக்க உதவும்.
    Next Story
    ×