என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி கோவிலில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.
    X
    கன்னியாகுமரி கோவிலில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு தை அமாவாசை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலிபூஜை, நெய்வேத்திய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடைபெற்றது.

    தை அமாவாசையைெயாட்டி 2-வது நாளாக அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அவர்கள் கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர். அதன்பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இரவில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    Next Story
    ×