search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த போது எடுத்த படம்.
    X
    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த போது எடுத்த படம்.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா

    திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை பவுர்ணமியாக்கிய விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளை அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். விழாவில் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக நடைபெறும்.

    தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னர் தை அமாவாசை நாளில் பூம்புகார் சென்று கடலில் நீராடிவிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது மன்னரின் வருகையை கவனிக்காமல் சுப்பிரமணிய பட்டர் தியான நிலையில் இருந்தார்.

    இதைக்கண்ட மன்னர் பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பி பட்டரே இன்று என்ன திதி என்று கேட்டார். அப்போது, அபிராமி அம்மனின் தியான நிலையில் இருந்த சுப்பிரமணிய பட்டர் வாய் தவறி தை பவுர்ணமி என கூறினார். அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியதால் அச்சத்தில் இருந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நோக்கி அந்தாதிப் பாடல்களை பாட தொடங்கினார்.

    அப்போது அபிராமி அம்மன் பட்டருக்கு நேரில் தோன்றி, தனது காதில் அணிந்திருந்த தோடு ஒன்றை கழற்றி வானில் வீசினார், அது முழு நிலவாக வானில் ஒளி வீசி அமாவாசையை பவுர்ணமியாக மாற்றி காட்சி அளித்தது. இந்த அதிசய நிகழ்வை தொடர்ந்து சுப்பிரமணிய பட்டர் அபிராமி பட்டர் என சிறப்போடு அழைக்கப்பட்டார்.

    தை அமாவாசை நாளான நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி பாடல்களை பாட ஒவ்வொரு பாட்டுக்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார். பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைப்பெற்றது.

    முன்னதாக ஆணைக்குளத்துகரையில் அமைந்துள்ள எதிர்காளிஸ்வரர் கோவிலில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×