என் மலர்tooltip icon

    வழிபாடு

    பஞ்சவடி ஆஞ்சநேயர்
    X
    பஞ்சவடி ஆஞ்சநேயர்

    பஞ்சவடி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சவடி கோவிலில் வருகிற 2-ந் தேதி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.
    திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஸ்ரீவாரி வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று ஒழிய 108 திவ்ய தேசங்களுக்கு சென்று அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடி பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சொர்ண ராம பாதங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.

    மறுநாள் 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 10 மணிக்கு வாசுகி மனோகரன் குழுவினரின் ஸ்ரீராமனும், அனுமனும் என்ற தலைப்பில் இசைசொற்பொழிவு நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபசாரம், சாற்றுமுறை மற்றும் திருவாராமனம் ஆகியவை நடக்கிறது.

    மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இந்த தகவல்களை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், கூடுதல் தலைவர் யுவராஜ், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்டராமன் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×