search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அலங்காரத்தில் நடராஜர்
    X
    அலங்காரத்தில் நடராஜர்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது

    ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கோவில் வளாகத்துக்குள் தேர் மற்றும் தரிசன விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் திருவிழா நடத்த அனுமதிகோரி பக்தர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

    அதன்படி கடந்த 11-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சுவாமிகள் வீதிஉலா நடத்தப்பட்டது. தற்போது ஒமைக்ரான் பரவி வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேர் மற்றும் தரிசன விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதனையறிந்த சிவனடியார்கள், பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேர்த்திருவிழா, ஆருத்ரா தரிசன விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அனுமதி வழங்கினார்.

    அதன் பின்னர் நேற்று காலை பக்தர்கள் புடைசூழ நடராஜர் கோவில் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 ரதவீதிகளில் வலம் வந்த தேர் மாலையில் கீழரத வீதியில் நிலையை அடைந்தது.

    நேற்று இரவு முழுவதும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று (20-ந் தேதி) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    காலை 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதிஉலா காட்சி நடந்தது.

    இன்று மாலை 3 மணியளவில் ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முன்முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் முன்னும் பின்னுமாக 3 முறை சுற்றி வந்து நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளிப்பார்கள்.

    இதனையடுத்து நடன பந்தல் வழியாக சுவாமிகள் கோவிலின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள 4 ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    நாளை (21-ந் தேதி) முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
    Next Story
    ×