search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆஞ்சநேயரின் விஸ்வரூப தரிசனம்
    X
    ஆஞ்சநேயரின் விஸ்வரூப தரிசனம்

    18 அடி உயர ஆஞ்சநேயரின் விஸ்வரூப தரிசனம்

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் வழிபாடு வந்ததே ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத் தான் உள்ளது. அதனை இங்கே பார்ப்போம்.
    சுசீந்திரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாணுமாலய சுவாமியை எந்த அளவுக்கு மனமுருகி வேண்டுகிறார்களோ, அதேபோல அங்குள்ள 18 அடி உயர ஆஞ்சநேயரையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் ஆஞ்சநேயர் வழிபாடு வந்ததே ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத் தான் உள்ளது. அதனை இங்கே பார்ப்போம்.

    சுமார் 258 ஆண்டுகளுக்கு முன்பு படையெடுத்து வந்த சந்தாசாகிப் சுசீந்திரம் கோவிலுக்குள் நுழைந்தார். படைகள் வருவதை ஏற்கனவே அறிந்த ஊர் மக்கள் மற்றும் ஆலயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் முன்னேற்பாடாக முக்கிய மூலஸ்தானங்களை சுவர் கட்டி அடைத்தும், ஆபரணங்கள் மற்றும் உடைமைகளை அப்புறப்படுத்தியும் பாதுகாத்தனர்.

    அப்படி பாதுகாக்கப்பட்ட 22 அடி உயர பக்த ஆஞ்சநேயரும் ஒருவர் ஆவார். படையினரால் சிலைக்கு சேதம் வந்திடாவண்ணம் காக்க கோவிலின் திருக்கிணறு அருகே சுமார் 23 அடி நீளத்தில் பூமியை தோண்டி சிலையின் உருவம் மண்ணுக்குள் இருக்கும் விதத்தில் குப்புற படுக்க வைத்து நீளமான சாதாரண கல்தூணின் மேல்பாகம் தெரிகின்ற அளவில் சிலையை பாதுகாத்தனர்.

    பல ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக மண்ணிலே புதைந்து கிடந்த ஆஞ்சநேயர், தனது லீலா வினோதங்களை சிறிது, சிறிதாக காட்டத் தொடங்கினார். நெடுநீள கல் தூண் போல இருந்ததின் மீது சின்னஞ்சிறுவர்கள் ஏறி வதும், இதில் பல பேர் கீழே விழுந்து ரத்தகாயங்கள் அடிக்கடி ஏற்படுவதும், கோவிலுக்கு தரிசனத்துக்கு வருபவர்கள் இந்த கல்லின் மீது உட்கார்ந்து இளைப்பாறும் போது எதையோ கண்டு பயந்து ஓடுவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதுபோன்று தொடர்ந்த சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்தது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா காதுக்கும் செய்தி எட்டியது. சுசீந்திரம் கோவில் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததால் புகழ்பெற்ற மலையாள ஜோதிடர்களை வைத்து தேவபிரசன்னம் நடத்தி அவர்கள் அறிவுரைப்படி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதையுண்டு கிடந்த 22 அடி உயரம் கொண்ட நீளமான கல் தூணை அதாவது ஆஞ்சநேயர் சிலையை புரட்டி பார்த்தனர். அப்போது அது ஆஞ்சநேயர், சீதாதேவிக்கு அசோகவனத்தில் காண்பித்த விஸ்வரூப தரிசன கோலம் என்பதை அவர்களால் உணர முடிந்தது.

    ஆகமவிதிகளின்படி அஷ்டபந்தனம் நடத்தி பிரதிஷ்டை செய்யாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் சிலையை தொட்டு வணங்கி கொள்ளலாம். சிரஞ்சீவி வரம் பெற்றவர் ஸ்ரீஆஞ்சநேயர். பிரதிஷ்டை பூஜை நடத்தினால் அதன் சக்தி மேலும் கூடி விடும். மூலவிக்ரகங்களுக்கு (பிரதிஷ்டை சிலைகளுக்கு) சக்தி குறைந்து விடும் என்று சாஸ்திர விதிமுறை கற்றவர்கள் கூறுகின்றனர்.

    22 அடி உயரங்கொண்டதும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டதுமான ஸ்ரீஆஞ்சநேயர் சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்ப்பது 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை மட்டும் தான். பாதத்தில் இருந்து உச்சி வரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணில் கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் ஆஞ்சநேயர்.

    சாஸ்திரமுறைப்படி பிரதிஷ்டை செய்யாமலேயே நாளுக்கு நாள் இவரது சக்தி வல்லமை பெருகி வருகிறது. தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இத்திருக்கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே. ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிர்புறம் அமையப் பெற்றுள்ள ராமர் சன்னதியில் ராமபிரான் அமர்ந்த திருக்கோலத்தில் சின் முத்திரையோடு உபதேசம் செய்யும் பாவனையில் சீதாதேவியுடன் அருள்புரிகிறார். அவரை வணங்குவது போல ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.

    Next Story
    ×