search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்: கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்ற பக்தர்கள்

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இன்று மாலை 6 மணி அளவில் தீப மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும்.மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    பரணி தீபத்தை முன்னிட்டு கோவிலில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பரணி தீபத்தை எடுத்து செல்லும் போதும் மழை பெய்து கொண்டிருந்ததால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசனம் செய்தனர்.

    பரணி தீபம்

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது. விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கொரோனா பரவலையொட்டி கடந்த 1 ஆண்டாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மகா தீப விழாவையொட்டி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரம் பேர் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலையில் பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×