search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுரகிரி
    X
    சதுரகிரி

    சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

    ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு இன்று முதல் 19-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    17-ந் தேதி பவுர்ணமியன்று சுந்தரமகாலிங்கசுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×