search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
    X
    மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்சதீபம் 19-ந்தேதி ஏற்றப்படுகிறது

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவில் லட்சதீபம் வருகிற 19-ந் தேதி ஏற்றப்படுகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா 14-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சுவாமி கொடிமரத்தில் கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரியகார்த்திகை அன்று கோவிலில் மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

    திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×