search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
    X
    திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

    திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 9-ந் தேதி மாலையில் கோவில் கடற்கரை நுழைவு பகுதியில் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோவில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த 2 நாட்களும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அன்றைய தினங்களில் கோவில் வளாகம் மற்றும் நகரப்பகுதியில் ஆங்காங்கே போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    2 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×