search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னிமலை முருகன் கோவில்
    X
    சென்னிமலை முருகன் கோவில்

    சென்னிமலை முருகன் கோவிலில் 5-ம்தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்: சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து

    சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கந்த சஷ்டி விழா எளிய முறையில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஆனால் இந்த ஆண்டும் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமியை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி பல்வேறு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு முருகப்பெருமானுக்கு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழா நடைபெறும் 6 நாட்களும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 6-வது நாளான நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கொரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த ஆண்டு கந்த சஷ்டி நிறைவு நாளான வருகிற 10-ந் தேதி இரவு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அன்று காலை 10 மணி அளவில் சென்னிமலை ைகலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்கள் காப்புகளை கழற்றி தங்களுடைய விரதத்தை முடித்துக்கொள்வார்கள். சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
    Next Story
    ×