search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அவ்வையார் அம்மன் கோவில்
    X
    அவ்வையார் அம்மன் கோவில்

    அவ்வையார் அம்மன் கோவிலில் இன்று கொழுக்கட்டை வழிபாட்டுக்கு தடை

    இன்று ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை வழிபாட்டுக்கு தடை விதித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    குமரி மாவட்டத்தில் ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால் அம்மன் கோவில்களில் கூட்டம் அலை மோதும்.

    அதன்படி, இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து, அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும். இதற்காக குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து, அவ்வையார் அம்மன் கோவில் வளாகத்திலேயே கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வையார் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனமும் பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு தீபாராதனையும், 7 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், உஷ கால பூஜையும் தீபாராதனையும் நடைபெறுகிறது. 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க மூன்று முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதே போல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×