search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பூசாரிகள் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.
    X
    ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பூசாரிகள் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.

    காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

    ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் பூசாரிகள் மட்டும் தீ மிதித்தனர்.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா தொடங்கியதும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபடுவர்.

    மேலும், அக்னிச்சட்டி ஊர்வலம், பால்குடம் ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலமாக வருதல், அன்னதானம் வழங்குதல் என திருவிழா நிறைவு பெறும் வரையிலும், ஈரோடு மாநகரமே திருவிழாக் கோலமாகக் காணப்படும். குறிப்பாக மஞ்சள் நீராட்டுடன் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது.

    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் மற்றும் தேர் திருவிழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி இரவு 9 மணிக்கு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த கம்பங்களுக்கு ஏராளமான பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரிகள் 9 பேர் மட்டும் தீ மிதித்தனர். அப்போது சுற்றி நின்றிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி காரைவாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத்தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக தேர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் 9.50 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். 12-ந் தேதி மாலை 3 மணி அளவில் மஞ்சள் நீராட்டுடன் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ந் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×