search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
    X
    நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

    நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

    நல்லங்கியூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    தேவூர்அருகே நல்லங்கியூரில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதையடுத்து நாள்தோறும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சன்னதியில் தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தி பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்தக்குடம் எடுத்துவந்தனர்.

    அப்போது மயில் அலகு, வேல் அலகு, எலுமிச்சை அலகு குத்தி கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் நல்லங்கியூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒரு சில பக்தா்கள் கைக்குழந்தையுடன் தீக்குண்டம் இறங்கினர். பின்னர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிறைவாக கிடா வெட்டி பெரிய பூஜை நடந்தது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலரும், கோவில் தர்மகர்த்தாவுமான குமார் தலைமையில், ஊர் கவுண்டர்கள், நிர்வாகிகள், கோவில் பூசாரிகள் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பெரமாச்சிபாளையம் ஓங்காளியம்மன் கோவில், கைக்கோளபாளையம் வடபத்ரகாளி அம்மன் கோவில், கொட்டாயூர் ஓங்காளியம்மன் கோவில், பாலிருச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழாநடைபெற்றது.
    Next Story
    ×