
தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகிணி (தெப்பக்குளம்) கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த தெப்பத் திருவிழா நேற்று மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 27-ந்தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.