
இதைத்தொடர்ந்து 16-ந்தேதி உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலை வந்து சேருவர். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு மஞ்சள் காப்பு கட்டி, பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். அன்றையதினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து, நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.
19-ந்தேதி மயில் வாகனத்திலும், 23-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 26-ந்தேதி அன்ன வாகனத்திலும் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 28-ந்தேதி பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.