
மூன்று கண்களும் பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
ராமபிரான் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து அனுமன், ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். அப்போது இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுள்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை. தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் அனுமனை தரிசிக்க இங்கு வருவர். அதை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
தை அமாவாசையை முன்னிட்டு, மூலவருக்கு நேற்று அதிகாலை திரு மஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து விடியற்காலை முதலே இங்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை வழிபட்டனர்.
அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலைகள் சாற்றி, குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டனர். மகா தீபாராதனையும் நடந்தது. இதில் பொறையாறு, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.