search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நாளை நடக்கிறது

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தை மாத நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் கொண்டுவந்து வைக்கப்படும்.

    அங்கு நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன் பிறகு அந்த நெல்மணிகள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதன் பிறகு அந்த நெல்மணிகளை பகவதியம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. பின்னர் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் விளைநிலங்களில் தூவினால் ஆண்டு முழுவதும் பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும்.

    நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், ஜெயச்சந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ ராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கோவில் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×