search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடக்கம்பட்டி கிராமத்தில் நிலை மாலையுடன் பக்தர்கள் முனியாண்டி கோவிலுக்கு வந்தனர்.
    X
    வடக்கம்பட்டி கிராமத்தில் நிலை மாலையுடன் பக்தர்கள் முனியாண்டி கோவிலுக்கு வந்தனர்.

    3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா

    திருமங்கலம் அருகே 3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அதிகாலையில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
    திருமங்கலம் :

    திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இங்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முனியாண்டி சாமி தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

    இங்கு சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் வருகை தந்து சாமியை வழிபட்டு சென்றனர். அனைத்து கிராம மக்களும் இங்குவர ஆரம்பித்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து முனியாண்டி சாமியின் தாய் கிராமமான இங்கு இருந்து பிடிமண் எடுத்து சென்று மற்ற கிராமங்களில் வைத்து முனியாண்டி சாமியை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடக்கம்பட்டியில் 86-வது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவில், கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் காப்புகட்டி ஒருவாரம் விரதம் இருந்தனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும், பால்குடம் எடுத்து தாம்பூலத் தட்டுகளுடன் கோவிலுக்கு சென்றனர்.

    கோவில் பூசாரி முனீஸ்வரன் அனைத்து வீதிகளுக்கும் சென்று மக்களை அழைத்து நிலை மாலையுடன் சென்று, நிலை மாலையை முனியாண்டி சிலை மீது வைத்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிக்கு பிரியாணி படையல் திருவிழாவையொட்டி தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்பு அதற்கு உரிய நேர்த்திக்கடனாக கிடாய்கள், சேவல்களை பக்தர்கள் வழங்கினர். சேவல்கள் வழங்கும் பக்தர்கள் கூவக்கூடிய சேவலை மட்டுமே வழங்குவது சிறப்பு. 3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களால் பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவிலில் நள்ளிரவு பூஜை முடிந்து ஆடு மற்றும் சேவல்களை முனியாண்டி சாமிக்கு பலியிட்டு, அதனை பிரியாணியாக சமைத்து முனியாண்டி சாமிக்கு படையல் செய்து பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அதிகாலையில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் உள்பட திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×