search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது
    X

    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா தொடங்கியது

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி(தெப்பக்குளம்) கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் கி.பி.16-ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.

    இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தெப்ப திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடி, தாயுமானசுவாமி கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க வீதி உலா கொண்டு செல்லப்பட்டு, மலையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவில் கம்பத்தடி மண்டபம் சென்றடைந்தது. பின்னர் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தின் அருகில் தாயுமானவர், தாயுமானவர் பிரியாவிடை மட்டுவார்குழலம்மை, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு முக்கிய பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து தங்க கொடி மரத்தில் தாயுமானசுவாமியின் கொடி ஏற்றப்பட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் சுவாமி கேடயம் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் திருவிழா முடியும் வரை ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.



    இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 20-ந் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும். தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 21-ந்தேதி பங்குனி உத்திரத்தையொட்டி அன்று காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை பூர்வாங்க பூஜைகளுடன் கணபதி ஹோமம், ரிஷப யாகம் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தினமும் காலை பல்லக்கிலும், இரவு 7 மணிக்கு பூத வாகனம், மயில்வாகனம், கைலாச வாகனம், அன்னவாகனம், சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 5-ம் நாள் திருவிழாவான 16-ந் தேதி இரவு 7 மணிக்கு தனித்தனி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 21-ந் தேதி தீர்த்தவாரியும், மாலையில் நடராஜர் புறப்பாடு மற்றும் கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந் தேதி பிச்சாடனார் புறப்பாடும், இரவு 7 மணிக்கு சண்டிகேஸ்வரர் புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும்் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×