search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
    X

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதையொட்டி நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ் வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் குறித்து மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனீஸ்வரர் தனி சன்னதி கொண்ட தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இறுதிகட்ட பணிகளாக கோபுரங்களில் கலசங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    சனீஸ்வர பகவான் சன்னதியில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தல், விழாவிற்கு, வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை தயார் நிலைக்கு கொண்டு வருதல், மாவட்ட போக்குவரத்து துறை மூலம் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதி செய்துள்ளோம்.

    எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம். சனிப்பெயர்ச்சி விழாவின்போது செய்யப்பட்ட விரிவான வசதிகள் கும்பாபிஷேகம் விழாவிலும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×