search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    பழனி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்ததை படத்தில் காணலாம்.

    பழனி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கம்பம் சாட்டுதல்

    பழனி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் திகழ்கிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் கம்பம் சுற்றி வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்பு காலை 7 மணிக்கு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு தீபாராதனை நடந்தது. மேலும் பக்தர்கள் பால், மஞ்சள்நீரை ஊற்றி வழிபாடு செய்தனர்.

    விழாவில் வருகிற 12-ந் தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×